கோவை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் 7.5 அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 45 எம்.எல்.டி. நீரும், மாநகர பகுதிகளுக்கு 41 எம்.எல்.டி நீர் தரப்படுவதாக அதிகாரிகள் தகவல்.
கோவை: கோவை மாவட்டத்தில் மழை குறைந்ததன் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 7.50 அடியாக சரிந்துள்ளது
கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
சிறுவாணி அணை 49.53 அடி உயரம் கொண்டது. ஆனால் கேரள அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை. கடந்த 3 வருடங்களாக கேரள நீர்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை.
அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையில் இருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்து விட்டு அணையின் நீர்மட்டத்தை கணிசமாக குறைத்துள்ளது.
மேலும் தற்போது மழையின்றி அணையில் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால், சிறுவாணி அணையிலிருந்து குகை வழிப்பாதை வழியாக நாள் ஒன்றுக்கு வரும் நீரின் அளவு தற்போது மிகவும் குறைந்துள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 7.5 அடியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 45 எம்.எல்.டி. நீர் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது. மாநகர பகுதிகளுக்கு 41 எம்.எல்.டி நீர் தரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.