கோவையில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று மால்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இன்று முதல் அப்படம் திரையிடப்படாது என மால் நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
கோவை: கோவையில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட மூன்று மால்களில் உள்ள திரையரங்களில் நாளை முதல் அப்படம் திரையிடப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வலியுறுத்து இஸ்லாமிய அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் மால்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்பிற்காக அங்கு சுமார் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் கோவையில் உள்ள மூன்று மால்களில் உள்ள திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என திரையரங்கு நிர்வாகத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.