சென்னையில் கடந்த ஏப்ரல் 27-ல் பாஜகவின் பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில், பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கோவை: சென்னையில் பாஜக பட்டியலின நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் கடந்த 27ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாஜகவின் பட்டியலின அணி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் நடைபெறும் படுகொலை சம்பவங்களை கண்டித்தும் பாஜக நிர்வாகிகளை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் மாவட்ட தலைவர் வசந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜக பட்டியலின நிர்வாகிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாஜக பக்கம் பட்டியலின மக்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனர்.
இன்றைக்கு போலியாக சமூக நீதி என கட்சிகள் பேசி வருகின்றனர். அவர்களின் வேஷம் கலைந்து பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கட்சி பிஜேபி என இணைந்து வருகின்றனர். இதனால் குறிவைத்து பட்டியலின நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.