கோவை மாவட்டம் தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம், கிரிதரன் என்பவரின் மளிகை கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது. இது தொடர்பாக வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: கோடை காலம் தொடங்கியுள்ளதால், கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
வெப்பத்தின் காரணமாக, குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.
இந்நிலையில், நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள், கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்தி கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை சாப்பிட்டன.
இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
வீரபாண்டிபுதூர் கிராமத்திற்குள் யானைகள் நுழைந்தது ஊர்மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம் வனப்பகுதிகளுக்கு உள்ளேயே காட்டுவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு ஆதாரங்களை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.