தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21ஆம் தேதி அன்று, 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது . இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக அரசின் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நகலை எரித்து தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன் காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.