கோவையிலிருந்து பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மே 1 தேதி கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு இந்த சவுத் ஸ்டார் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவை: இந்தியாவில் பயணிகள், சரக்கு ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் தளங்கள் சார்ந்து பாரத் கெளரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. இவை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) மட்டுமன்றி, தனியாராலும் நிா்வகிக்கப்படுகிறது.
கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு இயக்கப்படவுள்ள பாரத் கௌரவ் ரயில் சேவை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய சவுத் ஸ்டார் ரயில் ஒருங்கிணைப்பாளர் முரளி, 'பாரத பிரதமரின் கனவு திட்டமான பாரத் கெளரவ் திட்டத்தின் மூலம் இதுவரை கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு ஆறு முறை சவுத் ஸ்டார் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது. வரும் மே 1ம் தேதி துவங்க உள்ள கோயம்புத்தூர் ஷீரடி ரயிலில் 250 பயணிகள் பயணிக்க உள்ளனர். இந்த ரயிலிலி படுக்கை வசதி மற்றும் ஏசி வசதி உள்ளது.
சுமார் 2,600 கிலோமீட்டர் பயணம் செய்வதால் பயணிகளுக்காக உயர்தர சைவ உணவு, பக்தி இசை ஒலிபரப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் தங்கி, வியாழக்கிழமை அன்று பயணிகள் சிறப்பு தரிசனம் மேற்கொள்வார்கள். அதற்கான, சிறப்பு தரிசன சீட்டுகள் வழங்கப்படும்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக மருத்துவர்கள் இருப்பார்கள். மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மிகவும் சுகாதாரமான வகையில் ரயில் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு சிறப்பான முறையில் பயணிகள் ஷீரடி தரிசனம் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.