கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில் இன்று நடைபெற்ற பெட்டிசன் மேளாவில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 109 மனுக்களில், 2 மனுக்கள் FIR மற்றும் 2 மனுக்கள் CSR பதிவு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு, மீதமுள்ள 105 மனுக்கள் சுமூக தீர்வு காணப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில் இன்று பெட்டிசன் மேளா நடைபெற்றது.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அவற்றிற்கான மறுவிசாரணை பெட்டிசன் மேளா கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பெட்டிசன் மேளாவில், ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறு விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இன்று நடைபெற்ற பெட்டிசன் மேளாவில் நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 109 மனுக்கள் மீது மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யவும், 2 மனுக்கள் மீது மனு ரசீதுகள்(CSR) பதிவு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டன. மேலும், 105 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.
இந்த குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பெட்டிஷன் மேளா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.