பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ் (15). இவர் பள்ளிக்கு ஆசிரியர்களிடம் அனுமதி பெறாமல் விடுமுறை எடுத்ததால், மாணவரின் வீட்டுக்கே வந்து ஆசிரியர் ராஜசேகர் அழைத்துச் சென்றார்.
கோவை: பொள்ளாச்சி அருகே பள்ளிக்கு ஆசிரியர்களிடம் அனுமதி பெறாமல் விடுமுறை எடுத்த மாணவனை வீட்டிற்கு வந்து ஆசியர் அழைத்து சென்றார்.
கோவை பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் வரை 10 வகுப்பு வரை என 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருவதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ் (15) பலமுறை அழைத்தும், பள்ளிக்கு வராமல் பல காரணத்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இதை அறிந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ராஜசேகர் என்பவர் மாணவனை காண வீட்டிற்க்கு வந்துள்ளார்.
அங்கிருந்த சஞ்சீவிடம் பள்ளிக்கு வராததுக்கான காரணத்தை கேட்டபோது தனது சித்தி உள்ளூரில் நடைபெறும் கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க போவதாகவும், அதனால் பள்ளிக்கு வரவில்லை என்று ஒரு காரணத்தை கூறியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த ஆசிரியர் நாளை பொதுத்தேர்வை வைத்து கொண்டு ஏன் பள்ளிக்கு வர மறுக்கிறாய் என மாணவனுக்கு அறிவுரை கூறி ஊர்பொதுமக்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் மாணவனை கல்வி பயில தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவன் கல்வி கற்க பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக, ஆசிரியர் ஒருவர் மாணவனின் வீட்டிற்க்கு வந்து அறிவுரை கூறி அழைத்து சென்றது ஆசிரியர்கள் மீதான மரியாதை உயர்த்துவதாகப் பெருமையாகப் பேசிக்கொண்டனர்.
இந்த பள்ளி அனைத்து வகையிலும் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் காமராஜர் விருதை 2017ம் ஆண்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.