தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு விவசாயி காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது.
கோவை: தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்பவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைக் கண்டித்தும்,தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க கோரியும் தமிழ்நாடு ஜாதி,மதம் சார்பற்ற கட்சி விவசாயிகள் சங்கத்தினர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து, போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு விவசாயி காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்ததால் பதற்றமான சூழ்நிலை உருவானது, பின்னர் அவரை மீட்ட போலீசார், காவல் ரோந்து வாகனத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அனுமதியின்றி காவல் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 12 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து பேசிய விவசாயிகள், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறோம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில்கள் இறக்க அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, உடலுக்கு தீங்கு விளைவிக்காத கள் விற்பனைக்கு அனுமதி வழங்காதது வேதனையாக உள்ளது.
கள் இறக்க அனுமதி வேண்டும் என கூறி தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் முதல்வர் என்று கூறும் முதல்வர், விவசாயிகள் வாழ்வாதரத்தை உறுதி செய்ய உடனடியாக கள் இறக்க அனுமதி வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.