காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ராமநாதபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து கோவை ராமநாதபுரம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
INTUC கோவை மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதில் சிலர் ராகுல் காந்தியின் முகமூடியை அணிந்து கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் வட்ட தலைவர், கணேசன், பார்த்திபன், காந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.