அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன்..! - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து அண்ணாமலை வெளியிட்டு இருக்கின்றார். என்னைப் பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார். முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருக்கின்றேன் என்று கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.



கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியதற்குப் பதிலாக வீடியோ ரெக்கார்டு பண்ணி அனுப்பி இருக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளான இன்று கண்காட்சியை நடிகர் தம்பி ராமையா பார்வையிட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:



அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பில் என காகிதத்தை வெளியிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும். இந்த எக்ஸ் எல் சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.

அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சமாகும். மாத மாதம் இதை யார் கொடுக்கின்றார்?. ஒரு மாதம் உதவி செய்யலாம், வருடம் முழுக்க யார் உதவி செய்வார்? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியிலிருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகின்றதா?

வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் சொந்த நிதியிலிருந்து பணம் எதுவும் செலவு செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கும் போது, அரவக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது எப்படி என்று தெரிவிக்கவில்லை.

அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியதற்குப் பதிலாக வீடியோ ரெக்கார்டு பண்ணி அனுப்பி இருக்கலாம், பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கவே வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் குறிப்பிடும் நபர் வாட்ச் வாங்கியது 4.5 லட்சம் ரூபாய், அதை 3 லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கொடுத்ததாக சொல்கிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது. வாட்ச் நம்பரையும் மாற்றி, மாற்றி சொல்கின்றார். அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார்.

ஒரு வெகுமதியை மறைக்க, லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கின்றார் அண்ணாமலை. பரிசு கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?. தேசியக் கட்சியில் இருப்பதால் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் குற்றச்சாட்டை சொல்கின்றார். இன்று அவர் வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில்லை.

அண்ணாமலை காருக்கு யார் டீசல், பெட்ரோல் போடுகிறார்கள், மூன்று உதவியாளர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்?. 4 ஆட்டை மேய்த்தால் சென்னையில் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா? தூய்மையாக இருக்கின்றீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுறீங்க? தன்னை விட தனது மனைவி அதிகம் சம்பாதிப்பதாக அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்.

அப்படி இருக்கும்போது ஏன் அடுத்தவன் காசில், அடுத்தவன் சொத்தில் வாழ்கின்றார். படையப்பா படத்தில் ரஜினிகாந்த் பேசும் டயலாக் போல மாப்பிள்ளை அவர் தான் என்பதைப் போல பயன்படுத்துவதெல்லாம் நான் தான், ஆனால் கொடுப்பதெல்லாம் அவர்கள் என்பதை போல இருக்கின்றது.

இதுவே ஒரு அரசியல்வாதிக்கு அசிங்கமான விஷயம் இல்லையா? குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும், ஆனால் கோமாளித்தனமாக அண்ணாமலை செய்வதை டிவியில் ஒளிபரப்பி விட்டு, அதற்கு விளக்கமும் கேட்கின்றீர்கள். கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம், அந்த கட்சிக்கு தலைமை கோமாளியாக, கழிவு பொருளாக இருந்தால் என்ன செய்வது, தேசிய கட்சியிலிருந்தால் மட்டும் எல்லாம் வந்து விடுமா? சாப்பிடும் சாப்பாடு,பெட்ரோல், சம்பளம், வீடு, மூளை எல்லாமே அவருக்கு ஓசியாக இருக்கின்றது.

அவர்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றனர், எவ்வளவு பூத் கமிட்டி அமைத்து இருக்கின்றனர், தேர்தலில் எதை செய்யப் போகின்றனர் என்பதை சிந்தித்து தேர்தல் பணி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து இன்று வெளியிட்டு இருக்கின்றார். என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார். 

முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருக்கின்றேன். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய்யை சொல்கின்றார்.

தமிழகத்தில் நேற்று ஒருநாள் அதிகபட்ச மின் நுகர்வு 400 மில்லியன் யூனிட் கடந்து இருக்கிறது. முதல் முறையாக இந்த அளவு கடந்து இருந்தாலும் எந்தவித மின்தடையும் இல்லாமல் மின்வாரியம் செயல்பட்டு இருக்கிறது. 

அதற்கு காரணம் தமிழ்நாட்டு முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான், வெளிச்சந்தையில் அவசரத்துக்கு வாங்குவதை விட, முன்கூட்டியே கோடை காலத்துக்கு தேவையான மின் தேவையை கணக்கிட்டு, குறுகிய கால ஒப்பந்த மூலம் வாங்கி இருக்கிறோம்.

மின் சந்தையில் வாங்குவதற்கும், இப்பொழுது டெண்டர் மூலம் வாங்கியிருப்பதால் ஏற்பட்டிருக்கின்ற சேமிப்பு 1312 கோடி ரூபாய, இந்த சேமிப்பை முதல்வர் உருவாக்கி தந்திருக்கிறார். கடந்த ஆண்டுகள் போல இல்லாமல் இந்தாண்டு இன்னும் மிகச் சிறப்பாக பாதிப்பு இல்லாமல் மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...