தமிழ் புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள காட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 6 கோடி ரூபாய் பணம், நகை மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கோவை: ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதேபோல், கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.
அதன்படி, கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது.
இக்கோவிலில் சித்திரை முதல்நாளான இன்று 100,200,500,2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் 6 கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது.
இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் கோவையிலுள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் தமிழ் புத்தாண்டு கொண்டாடபட்டது.