திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் தொகைக்கேற்ப ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்.
திருப்பூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியர்கள் அதிகப்படுத்த மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், 36 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து குழுவினர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது உள்ள மக்கள் தொகைக்கேற்ப ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும். அதிக நோயாளிகள் வரக்கூடிய நிலையில் அவர்கள் கீழே படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை தொடர்கிறது.
கட்டிடத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தி தர வேண்டும், பிரேதப் பரிசோதனைக்கு தினந்தோறும் 5 முதல் 15 பிரேதங்கள் வரக்கூடிய நிலையில் ஒரே ஒரு நிரந்தர ஊழியர் மட்டுமே பணிபுரிவதால் பிரேதப் பரிசோதனைக்காக வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு அவர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை நீடிக்கிறது. ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் தேவையான அளவு மருத்துவமனையில் இல்லை, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் அவசர உதவிக்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் நிலவுகிறது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும் கூட அவைகளுக்கு ஓட்டுநர் இல்லாததால்,அவை இயக்கப்படாத சூழல் நிலவுகிறது.
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தற்போது உள்ள மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுநர்களை நியமித்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை மனுக்களாக சுகாதாரத் துறை அலுவலர்களிடம் வழங்க உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.