கோவை கணபதி பகுதியில் இட விற்பனைப் பத்திரத்தை முறையான விசாரணை நடத்தாமல் ரத்து செய்த பதிவாளரைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நியாயம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் போலி ஆவணம் உருவாக்கி இட விற்பனை நடைபெற்றதாக ராஜாராம் என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட பதிவாளர் அது தொடர்பான இடப்பத்திரங்களை ரத்து செய்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை கணபதி பகுதியில் உள்ள சி.எம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், எங்கள் பெயரில் உள்ள அனைத்து விற்பனை பத்திரங்களையும் ரத்து செய்யக்கோரி ராஜாராம் என்பவர் புகார் அளித்துள்ளதாக மாவட்ட பதிவாளரிடம் இருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தில் சிஎம் ராஜூ என்பவர் போலி ஆவணம் உருவாக்கியதாகவும் அதிலிருந்து அடுத்தடுத்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டதாகவும் ராஜாராம் கூறுகிறார்.
அவர் காளீஸ்வரன் மற்றும் குமாரசாமி என்பவர்களிடமிருந்து கடந்த 1997 ஆம் ஆண்டு சொத்துக்களை வாங்கியதாகவும், அவர் வாங்கிய சொத்துக்கள் எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கிறார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட பதிவாளர் எங்களுக்கு முழு அவகாசம் வழங்காமல், தீர விசாரிக்காமல் எங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல், எங்கள் பெயரில் உள்ள விற்பனை பத்திரங்கள் அனைத்தையும் ரத்து செய்ததோடு மட்டுமின்றி, மூல பத்திரங்களையும் அவசர அவசரமாக ரத்து செய்துள்ளார். அவர் எங்களை அழைத்து கருத்து எதுவும் கேட்காமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளதால் இங்குள்ள அனைவரும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை பத்திரப்பதிவுத்துறையில் மேல்முறையீடு செய்துள்ளோம். அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், ராஜாராம் சில ஆட்களை அனுப்பி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை அபகரிக்கும் செயலை செய்து வருகிறார்.
காளீஸ்வரன் மற்றும் குமாரசாமி ஆகியோர் ராஜாராமுக்கு சொத்தை விற்றபொழுது, அவருக்கு அதில் எவ்வித உரிமையும் இல்லை என்பதற்கான ஆதாரங்களும் தங்களிடம் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தினர்.