கோடைக் காலம் துவங்கியதால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில் கோவை பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்ட கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானை குட்டி இறந்த நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பாலமலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் யானை குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை பகுதியில், அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது.
இதையடுத்து தோட்டத்திலிருந்த பணியாளர்கள் பார்த்த போது, அதில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக வனத்துறை ஊழியர்கள் இறந்த யானை குட்டியின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 அடி ஆழம் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானைகள் கூட்டமாக வந்த போது, அதில் சிறிய குட்டி தவறி விழுந்திருக்கலாம் எனவும், குட்டி விழுந்து சுமார் 3 நாட்களாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானை குட்டியின் உடலை மீட்டவுடன், நாளை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.