பணி நிரந்தரம், கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு பூங்கா பணியாளர்கள் மற்றும் பண்ணை பணியாளர்கள், பழமை வாய்ந்த மரத்திற்கு மனு அளித்து நூதன போராட்டம்.
நீலகிரி: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் 5வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம், மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ள ஊதியம் வழங்குதல். பணி மூப்பு அடிப்படையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.
சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ஆம் தேதி முதல் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5வது நாளாக போராட்டம் நீடித்துவரும் நிலையில், இதுவரை இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் அறவழி போராட்டம், ஒப்பாரி வைத்து போராட்டம், கண்டன கோஷம் எழுப்பும் போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அரசோ, மாவட்ட நிர்வாகமோ, தோட்ட கலைத்துறை அதிகாரிகளிடம் இருந்தோ இந்த போராட்டத்திற்கு எவ்வித பதிலும் இல்லை என்று கூறி 5வது நாளாக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பூங்கா ஊழியர்கள் பூங்காவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரமான தேவதாரி மரத்திற்கு ஊர்வலமாக சென்று கண்ணீருடன் மனு அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.