உடுமலை நகராட்சியில் திமுக நகர மன்ற தலைவராக இருக்கும் மத்தீன், 32வது வார்டில் பல லட்சம் மதிப்பில் தரைமட்ட பாலம் அமைத்து கொடுத்தற்காக நன்றி கூறி பாராட்டி அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நகரமன்றத் தேர்தலில் 18 வார்டுகளை திமுக கைப்பற்றிய நிலையில் நகரமன்ற தலைவராக மத்தீன் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுக 5 வார்டுகளில்மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் வேண்டுகோளை ஏற்று பல லட்சம் மதிப்பில் தரைமட்டபாலம் அமைத்து கொடுத்தஉடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து நன்றி என 32 வது வார்டு அதிமுக எம்ஜிஆர் மன்றம் ருத்ரப்பநகர் சார்பில் பேனர் வைக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறாக ஒரு திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பேனர் வைப்பார்களா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உடுமலையில் திமுக நகர மன்ற தலைவருக்கு அதிமுகவினர் பாராட்டும் விதமாக பேனர் வைக்கப்பட்ட சம்பவம் உடுமலையில் அதிமுகவினரிடையேபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.