கோவை மாவட்டம் வால்பாறையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் உள்ள வளையல் கடை அருகே இளைஞர்கள் கஞ்சா உபயோகிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டபோது சேலத்தை சேர்ந்தசஞ்சய் (வயது19), வால்பாறை மாணிக்கா என்.சியை சேர்ந்த பாலாஜி (வயது19) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் என்றும் மற்றொருவர் புதுத்தோட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 21) வேலைசெய்து வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர்.