தாராபுரத்தில் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில், சோலார் மூலம் தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை டிஎஸ்பி தனராசு வழங்கினார்.
திருப்பூர்: தாராபுரத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டிஎஸ்பி தனராசு தொப்பிகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் மற்றும் உடுமலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதியில் இரவும் பகலும் பாதுகாப்பு பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தலையில் அரசு முத்திரை பதித்த தொப்பியைப் பயன்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அவ்வாறு போலீசார் அணிந்துள்ள தொப்பி சூடேறி போலீசார் பாதுகாப்பு பணியின் போது மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து போலீசாரின் நிலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தாராபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலை, பாதுகாக்கும் சோலாரை உறிஞ்சி தலைக்கு குளுமை தரக்கூடிய வட்ட வடிவமான தொப்பியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு போலீசாருக்கு வழங்கி நீர்மோர் கொடுத்தார்.
அப்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.