உலக கண் அழுத்த நோய் வாரத்தையொட்டி, கிளக்கோமா மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் இடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு மாணவ, மாணவிகள் கண் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கண்ணில் அதிகரிக்கும் அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து பார்வையை இழக்கும் அபாயம் கொண்டது தான் கிளாக்கோமா என்ற நோய். இந்த கண் அழுத்த நோய்க்கு துவக்க நிலையிலேயே உரிய சிகிச்சையை பெற வேண்டியது அவசியமாகும்.
இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உலக கண் அழுத்த நோய் வாரம் மார்ச் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு, கோவையில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சரவணம்பட்டி சோதனை சாவடி முன்பாக உள்ள பிரதான சாலையில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கண் அழுத்த நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.