கோவையில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து கோவைப்புதூர் பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை: கோவைப்புதூர் அறிவொளி நகர் எம்ஜிஆர் நகரில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகித்து சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனவும் இதனால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் புகாத் தெரிவித்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.