கோவையில் நடந்த இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழு பணியாளர்கள் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழு பணியாளர்கள் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழுவின் சார்பில் கடந்த 4 ஆம் தேதி பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து எழுதினர்.
தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான ஆவணங்கள் சரி பார்த்தல் மற்றும் நேர்முகத் தேர்வு நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் ஆங்கிலத்தில் பேசத் தெரியாமல் திணறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்களை ஆங்கிலத்தில் எழுதக் கூறிய போது, எழுதத் தெரியாமலும் இருந்துள்ளனர்.
இதையடுத்து ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு இயக்குநர் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.அமித்குமார் (30), எஸ்.அமித்குமார் (26), அமித் (23), சுலைமான் (25) ஆகிய நான்கு பேரை சாய்பாபா காலனி காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறும் போது, இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்ததாக வந்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த தேர்வு ஆள் மாறாட்டத்தை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் பின்னாலில் இருந்து இயக்கி உள்ளது தெரியவந்துள்ளது.
இதே போல மற்ற தேர்வு மையங்களிலும் ஆள் மாறாட்டம் நடக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல ஒருங்கிணைப்பாளர் யார் என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.