கோவை மாநகராட்சியின் 62வது வார்டுக்கு உட்பட்ட கரும்புக்கடை மற்றும் சாரமேடு பகுதிகளில் முறையாக தண்ணீர் விநியோகிக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கரும்புக்கடை சந்திப்பில் பொதுமக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் கரும்புக்கடை அருகே முறையாக தண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி 62 வது வார்டுக்கு உட்பட்டகரும்புக்கடை மற்றும் சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள். முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, கரும்புக்கடை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ஈடுபட்டுள்ள பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து தண்ணீர் வேண்டும் எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர். மேலும் 62-வது வார்டு கவுன்சிலரை காணவில்லை என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய அப்பகுதி மக்கள், இதுவரை தங்கள் கவுன்சிலர் ரேவதி முரளி கூட தங்களை வந்து சந்திக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.
மேலும் சாலைகள் சீரமைக்கப்படாததால் மழை காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். தங்கள் வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள், தங்களை சந்திக்காத வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், வார்டு கவுன்சிலர் ரேவதி முரளி நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், லாரி மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.