பொள்ளாச்சி அருகே பெரியகவுண்டனூர் பகுதியில் தனியார் விவசாய தோட்டங்களில் விஷம் கலந்த உணவை தூவி 20 காகங்களை கொன்ற சிஞ்சுவாடி கிராமத்தைச் சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி சூர்யா என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே காகங்களை விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த சில தினங்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்ததும், மேலும் இறந்த காகங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை நாகராஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் ஒரு நபர் இறந்த காகங்களை சாக்கு பையில் நிரப்பிக் கொண்டிருந்தார். நாகராஜை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அப்பகுதி மக்கள் துரத்திச் சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் காகங்களைக் கொன்ற சிஞ்சுவாடி கிராமத்தைச் சேர்ந்த சர்க்கஸ் தொழிலாளி சூர்யா (37)என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட காகங்களை பறிமுதல் செய்தனர்.
காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், உடலில் ஏற்படும் தோல் வியாதியான வெண்படை நோயை குணப்படுத்த மருந்து தயாரிக்க காகங்களை கொன்றதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இவர் காகங்களை உணவு விடுதிகளுக்கு பிரியாணி தயாரிக்க கொடுப்பதற்காக கொன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.