உழைத்து சம்பாதித்து வாங்கிய வீட்டில் எனது பிள்ளைகளே என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு தன்னை வீட்டை விட்டு துரத்திவிட்ட மகன், மகள்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மணியகாரம்பாளையத்தை சேர்ந்த 80 வயது முதியவர் நடராஜன் என்பவர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கோவை: கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன்(வயது80). இவரது மனைவி பட்சியம்மாள். இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், பார்வதி, பாக்கியலட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிய நிலையில், ஆனந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தனியார் மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்று செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த நடராஜன் வயது முதிர்வு காரணமாக தற்போது வேலைக்குச் செல்வதில்லை. தனது வருமானத்தில் நடராஜன் மணியகாரம்பாளையம் பகுதியில் 7 சென்ட் இடத்தில் வீடு ஒன்றை வாங்கி வசித்து வந்த நிலையில், நடராஜனின் மகனும், மகள்களும் அவரிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கியுள்ளனர். வீட்டை எழுதி வாங்கியவுடன் இனிமேல் இந்த வீட்டில் வசிக்கக்கூடாது என்று கூறி முதியவரை வெளியில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன், இதுகுறித்து கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய வட்டாட்சியர், ஆனந்தகுமார், பார்வதி மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய மூவரும் மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயை நடரஜனுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை முதியவருக்கு அந்த பணத்தை கொடுக்காத அவரது பிள்ளைகள், தற்போது மீண்டும் வீட்டை விட்டு துரத்துவதாகவும், மீறி தங்கினால் தண்ணீர்கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும் முதியவர் நடராஜன் குற்றம்சாட்டுகிறார்.
இதனிடையே மூவர் மீதும் நடவடிக்கை எடுத்து, தனது வீட்டை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது பேத்தியுடன் வந்து நடராஜன் மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உழைத்து சம்பாதித்து வாங்கிய வீட்டில் எனது குழந்தைகளே என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.