உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் புதிய பள்ளி துவக்க விழாவில் பங்கேற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி, சாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் இருப்பதற்கு கல்வி ஒரு முக்கிய காரணம். மொத்தத்தில் கல்வி ஏழைகளுக்கு செல்வம், பெண்களுக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டியில் ஆர்.ஜி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் புதிய பள்ளி துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ராஜலட்சுமி கெங்குசாமி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரவீந்திரன் கெங்குசாமி, புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டார்.
விழாவில் கலியமூர்த்தி பேசியதாவது,
இன்றைய காலங்களில் கல்வியை விட உதவி செய்ய யாரும் துணை இல்லை. ஒவ்வொரு மனிதனின் உண்மையான வளர்ச்சி எதுவென்றால் அது கல்விதான். நிலையாக இருப்பது கல்விதான். உதாரணமாக என்னிடம் உள்ள காக்கி உடை தற்பொழுது இல்லை. நான் வாங்கிய பதக்கங்கள் இல்லை. ஆனால் கல்வி மட்டும் என்னிடம் உள்ளது.
சாதி மத பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் இருப்பதற்கு கல்வி ஒரு முக்கிய காரணம். மொத்தத்தில் கல்வி ஏழைகளுக்கு செல்வம், பெண்களுக்கு பாதுகாப்பு, வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை. ஆகையால் அனைவரும் கல்வி கற்க வேண்டும். கல்வி இல்லையெனில் இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதனும் வாழ்வில் முன்னேற முடியாது என்று கூறினால் அது மிகையாகாது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவில் ஆரண்ய அறக்கட்டளை தலைவர் நந்தினி ரவீந்திரன் மற்றும் உடுமலை ஆர்.வி.ஜி. பள்ளி செயலாளர் கார்த்திகேயன், பெதப்பம்பட்டி ஆர்.வி.ஜி. பள்ளி முதல்வர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்