உடுமலை ரயில் நிலையத்தில் பணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில், ஒரு மாதத்திற்கு முன்பாக வைக்கப்பட்ட தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர்: உடுமலை ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக உள்ள தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் உள்ளதாகப் பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் ரயில் நிலையத்துக்குத் தினமும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. உடுமலையிலிருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நாள்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள் பணி நிமித்தமாகச் சென்று வருகின்றனர்.
மேலும் விசேஷ நாட்களில் திருச்செந்தூர், பழனி போன்ற கோவில் தலங்களுக்கு அதிகப்படியான மக்கள் சென்று வருகின்றனர். இதற்கிடையில் உடுமலையில் பயணச்சீட்டு வழங்குவதற்கு ஒரே ஒரு கவுண்டர் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை ஏற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டது.
ஆனால் இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும், தற்பொழுது காட்சிப் பொருளாக உள்ளது.
இதனால் அவசர தேவைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் ஒரே ஒரு கவுண்டர் இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாமல் தொடர்வண்டியைத் தவற விடும் நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது.
காட்சிப் பொருளாக உள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டுமென உடுமலை ரயில் பயணிகள் குழு நலச்சங்கம் சார்பில் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.