கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் பிரியங்கா இல்லாமல் விவசாயிகள் குறைதீர் முறையீட்டுக் கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் கலந்துக் கொள்ளாமல் நடக்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை: தமிழகத்தில் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெறாத நிலையில், தற்சமயம் விவசாயிகளுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா விவசாயிகளுக்கும் விவசாய சங்கங்களுக்கும் விவசாய குறைத்தீர் கூட்டம் நடைபெறுவதாக பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பியும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், மற்றும் வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை சென்றுவிட்டதால் தாசில்தார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். விவசாயிகளிடம் உங்கள் குறைகளை நீங்கள் விண்ணப்பமாக கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியிடப்பு செய்தனர்.
மேலும் சார் ஆட்சியர் பணி நிமித்தமாக சென்னை செல்கிறார் என்ற தகவலை எங்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருந்தால் நாங்கள் விவசாய பணியினை விட்டு விட்டு இங்கு வந்திருக்க மாட்டோம் எனவும் கூறி அரசு அதிகாரிகள் நடத்திய கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.