பல்லடம் அருகேயுள்ள மகாலட்சுமி நகரில் வயதான தம்பதிகள் தனியாக தங்கியிருந்த நிலையில், விளக்கில் இருந்து, கட்டிலில் தீப்பற்றியதில் அதில் படுத்திருந்த மூதாட்டி அமிர்தம்மாள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூதாட்டி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகேயுள்ள மகாலட்சுமி நகரின் எட்டாவது வீதியில் பொண்ணு செட்டி (95) என்பவர் தனது மனைவி அமிர்தம்மாள் என்பவருடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் தாமு ஆட்டோ ஓட்டுனராகவும், ஹரிபாபு என்பவர் பனியன் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
எட்டாவது வீதியில் தனியாக வசித்து வரும் பொண்ணு செட்டி மற்றும் அமிர்தம்மாள் ஆகியோர் இன்று மாலை 6 மணியளவில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் விளக்கினை பற்ற வைத்துள்ளனர்.
இந்நிலையில், அமிர்தம்மாள் நைலான் கட்டிலில் படுத்திருந்த போது விளக்கில் இருந்து கட்டில் தீப்பிடித்து எரிந்ததில் அமிர்தம்மாள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே நடக்க முடியாத நிலையில் உள்ள கணவர் பொண்ணு செட்டி கீழே படுத்திருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். வீட்டிற்குள் தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து அவர்களது மகன்களுக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த அமிர்தம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிர் தப்பிய 95 வயது பொண்ணு செட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியாக வசித்து வந்த மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.