கோவை மக்கள் சேவை மையம் சார்பில் இன்று ”மோடியின் மகள்” திட்டத்தின் கீழ் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிக்கும் நிகழ்ச்சியானது இன்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
கோவை: மக்கள் சேவை மையம் சார்பில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வின் இறுதியில் செய்தியாளரகளை சந்தித்து பேசிய அவர்:-
கல்வி கற்ற குழந்தைகளுக்கும், திறமை படைத்த குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் வருடம் முழுவதும் அவர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களின் நலனை பேணி காக்க உள்ளதாக தெரிவித்தார்.
90% சதவீதம் ஆண்கள் இறக்க மதுவே காரணம் தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்து இளம் விதவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது. எனது தொகுதிக்குட்பட்ட தெற்கு தொகுதியில் கூட மார்க்கெட் பகுதியான ஒப்பணக்கார வீதி பகுதியில் மதுக்கடையை திறந்துள்ளார்கள்.
தமிழக முதல்வரின் போதை ஒழிப்பு தீர்மானம் கண் துடைப்புதான். மதுவால் 40 வயதுக்குள் இறந்த ஆண்களின் குடும்பத்தை மதுக்கடையை நடத்தும் மாநில அரசு தான் ஏற்று நடத்த வேண்டும். அதற்கு பாஜக குரல் கொடுக்கும் தமிழக அரசு இதுபோன்ற குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
குறைந்தபட்சம் தீபாவளி அன்றைக்காவது குடும்பம் நிம்மதியாக இருக்க தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மது விற்பனைக்கு இலக்கை வைப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது.
திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களின் பிள்ளைகள் இந்தி கற்றுக் கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால் அரசாங்க பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் தான் தமிழக அரசுக்கு இன்னொரு மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை என கூறினார்.
தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இதைத்தான் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. மோடி மருத்துவக் கல்வி உட்பட அனைத்து படிப்புகளையும் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார் ஏன் முதல்வர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.