நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் சுதந்திரத்திற்காக போராடிய மக்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களை ஒடுக்குவதற்காக அவர்களை கைது செய்து பல்வேறு இடங்களில் அடைத்து வைத்து சித்தரவதை செய்தனர். இதற்காகப் பல இடங்களில் சிறைச்சாலைகளை அமைத்தனர். அதுபோன்ற சிறைச்சாலை நீலகிரி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டது. 1850-ம் ஆண்டில் உதகை - கூடலூர் சாலையில் நடுவட்டம் பகுதியில் கைதிகள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடைப்பதற்காகச் சிறைச்சாலையை உருவாக்கினா். இதில், கைதிகளை அடைக்கும் வகையில் ஏராளமான அறைகள், தூக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 1864-ல் ஆங்கிலேயர் - சீன போரில் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைந்த கைதிகளை நடுவட்டம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடுவட்டம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை மற்றும் அதனை சுற்றி உள்ள தேயிலை தோட்டங்கள், தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் (டான்டீ) கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சிறைச்சாலை பராமரிப்பு இல்லாமல் இருந்தது.
பாரம்பரிய கட்டிடமாக விளங்கி வரும் இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்லும் வகையில் 2009-10ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு, தற்போது சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.

சிறைச்சாலை பொறுப்பாளர் இங்கர்சால் கூறும் போது, ‘‘நடுவட்டம் சிறைச்சாலையை புனரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைக் கொண்டு சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டது. வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இந்த சிறைச்சாலையை உருவாக்கிய மெக் ஐவர் குறித்து குறிப்புகள், ஆங்கிலேயர்கள் காலத்தில் பணியாற்றிய காவலர் மற்றும் கைதியின் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இச்சிறைச்சாலையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் அடங்கிய புகைப்படம், வரலற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள், பொருட்கள், சிற்பங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அருகில் உள்ள கட்டிடத்தில் குன்னூரில் இயங்கி வந்த அருங்காட்சியகம் மாற்றப்பட்டது. அருங்காட்சியகத்தில் தேயிலையின் வரலாறு மற்றும் தேயிலை தயாரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை மற்றும் அருங்காட்சியகம் காண சுற்றுலா பயணிகளிடம் ரூ. 10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய சின்னமான இச்சிறைச்சாலை குறித்த சுற்றுலா பயணிகள் மத்தியில் போதிய விளம்பரம் இல்லாததால் இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே, கோடை சீசன் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மத்தியில் இச்சிறைச்சாலை குறித்து போதிய விளம்பரங்களை ஏற்படுத்த டேன் டீ நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.