கோவை கொடிசிய தொழிற்கண்காட்சி வளாகத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாதனை மலரினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.
கோவை : கோவை கொடிசிய தொழிற்கண்காட்சி வளாகத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சாதனை மலரினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார்.

கோவை கொடிசிய தொழிற்கண்காட்சி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாதனை மலர் வெளியீட்டு விழா மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், சாதனை மலரை வெளியிட்டு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 1,922.13 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊரகப் பகுதிகளில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் நகரப்பகுதிகளுக்கு இணையாகப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் 500 அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊரக பகுதிகளில் இளைஞர்களுக்கு உடல்திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ரூ.50 கோடி மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ரூ. 5,348.82 கோடி மதிப்பீட்டில் 3.18 லட்சம் குடிநீர் திட்டப்பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. ரூ. 15,538.07 கோடி மதிப்பீட்டில் 59,913 கி.மீ. சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 793.71 கோடி மதிப்பீட்டில் 13,30,000 தெருவிளக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 654.10 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 66,025 தூய்மை காவலர்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதியளிப்புத்திட்டத்தினை செயல்படுத்துவதில், தேசிய அளவில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கின்றது. இதுவரை மொத்தம், 236.31 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.30,509 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு விருதுகளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
ஊரகப்பகுதிகளில், 2013-2018 வரை 45.47 இலட்சம் குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தாய்திட்டம் 1ன்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 3680 கோடி செலவில் 2.32 இலட்சம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாய்த்திட்டம் 2ன் கீழ் கடந்த இரண்டாண்டுகளில் ரூ.750கோடி மதிப்பீட்டில் 8995 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 4,868.34 கோடி மதிப்பீட்டில், 4,41,637 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 5,989.79கோடி மதிப்பீட்டில் 3.52 இலட்சம் வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 6,782 கோடி மதிப்பீட்டில் 3.40 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,117.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசு, கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஊராட்சி செயலர்களுக்கு தற்போது வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், ஊராட்சி செயலாளர்களுக்கு கிராம ஊராட்சி அதிகாரி பணியிடம் வழங்குதல், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குநர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
மேலும், யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுக இயக்கத்தை ஒன்றும் செய்யமுடியாது என தெரிவித்த அவர், டிடிவி தினகரன் ஜெயலலிதா இருக்கும் போது கட்சியில் உறுப்பினராக இல்லை என்றார். 100 ஆண்டு காலத்திற்கு அதிமுக இயக்கம் இருக்கும் என்றும் டிடிவி கட்சிக்கு போனவர்கள் அனைவரும் திரும்பி வந்து விடுவார்கள் என்று கூறினார். எடப்பாடி பழனிச்சாமி எளிமையான முதல்வர் எனவும் அவர் தலைமையில் மக்களுக்கான ஆட்சி தொடரும் எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.