கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி அதிரடியாக நீக்கப்பட்டார்.
கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி அதிரடியாக நீக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வின் தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளதாவது:- கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட காரணத்தாலும் திருப்பூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சி. பழனிசாமி கட்சி உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.
எனவே, கட்சி உறுப்பினர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்படும் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கே.சி.பழனிச்சாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- எந்த இடத்தில் நான் கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் மீறினேன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். அ.தி.மு.க.வின் பதவித் திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. அப்படி இருக்கும் போது, அவர்கள் எப்படி என்னை நீக்க முடியும். நான் அந்த ஆதாரத்தை நாளை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளியிடுவேன். இவ்வாறு கூறினார்.