கோவையில் வறண்டு கிடக்கும் மிகவும் புகழ்பெற்ற கௌசிகா நதி, தற்போது குப்பைக் குளங்களின் கூடாரமாக மாற்றப்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் வறண்டு கிடக்கும் மிகவும் புகழ்பெற்ற கௌசிகா நதி, தற்போது குப்பைக் குளங்களின் கூடாரமாக மாற்றப்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னுர் தாலூக்காவுக்கு உட்பட்டது கோவில்பாளையம் பகுதி. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊர் முற்காலத்தில் கௌசிகா புரி என்று அழைக்கப்பட்டுள்ளது .இங்கு ஓடும் ஆற்றுக்கு கௌசிகா நதி என முன்னோர்கள் பெயரிட்டு வணங்கத்தக்க நதியாகப் போற்றி வந்தனர். தற்போது, கோவில்பாளையத்தில் கௌசிகா நதி முழுக்க முழுக்க குப்பை கொட்டும் இடமாக மாற்றி உள்ளனர். பெரும்பாலும் கல்யாண மண்டபங்களில் குவியும் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளால், ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டு, தற்போது குப்பைக் கிடங்காக காட்சியளிக்கிறது.
எனினும், ஒரு சில சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 50 ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு சீமைகருவேல மரங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாத காரணங்களால் மீண்டும் கௌசிகா நதி அதன் தன்மையை இழந்து கிடக்கிறது. குப்பைகள் மற்றும் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கௌசிகா நதி தற்போது, இருந்த தடம் தெரியாத அளவிற்கு சீரழிந்துகிடக்கிறது.
இந்த நிலையில், கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில் கோவில்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் சமூக ஆர்வலர்கள் முறையிட்டனர். உடனே அவர் களத்தில் சென்று பார்த்து, இந்தக் கழிவுகளை இரண்டு நாட்களுக்குள் அகற்றி தருவதாக கூறினார். இனிவரும் காலங்களில் குப்பை கொட்டும் திருமண மண்டபங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தனித்தனியாக நோட்டீஸ் வழங்க அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார். மேலும், கௌசிகா நதியில் குப்பை கொட்டும் வாகனங்களைக் காவல்துறை உதவியுடன் பறிமுதல் செய்தல் மற்றும் தொடர்ந்து குப்பை கொட்டுவதை தடுக்கும் பொருட்டு கோவை - சக்தி சாலை பாலத்தில் முள்வேலி தடுப்பு அமைக்க நடவடிக்கைள் எடுக்கப்போவதாகவும் கூறினார்.
இவையெல்லாம் தாண்டி இனியும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி நாம் விழிப்புணர்வு கொள்ளவில்லை எனில் நதி மட்டும் நாறாது நாமும்தான்..!