வரும் 7-ந்தேதி பவானிஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டிவரும் இடத்தைச் சென்று பார்வையிடுவது என கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை : வரும் 7-ந்தேதி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டிவரும் இடத்தைச் சென்று பார்வையிடுவது என கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக, கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம், கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளருமான கு. இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக், தி.மு.க., மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, மாநகர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன், ம.தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் ராஜீவ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி. கலையரசன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தங்கராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆறுசாமி மற்றும் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆம் ஆத்மி கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டிவரும் இடத்தை 7-ந்தேதி அனைத்து கட்சியினர் சென்று பார்வையிடுதல், கேரள முதலமைச்சரை சந்தித்து பேசுதல் மற்றும் கோவையில் லட்சக்கணக்கானோரை திரட்டிப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.