தமிழகம்-கர்நாடகா இடையே ஒரு மாதத்திற்கு பிறகு போக்குவரத்து தொடக்கம்: லாரி, கார்கள் ஓடுகின்றன


ஒசூர்: தமிழகம்-கர்நாடகா நடுவே சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியுள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடகாவிற்குள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நடுவர் மன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 50 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள், என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த மாதம் 2ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த தனது முதல் உத்தரவில், அடுத்த 10 நாட்களுக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்பதால் தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. முதலமைச்சர் சித்தராமையாவின் உருவப்படம் பல்வேறு இடங்களில் கொளுத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மாநில அரசின் ஆசியோடு செப்டம்பர் 9ம் தேதி கர்நாடகா முழுக்க பந்த் நடைபெற்றது. அன்று முதல் இன்று காலை வரை தமிழக அரசு பஸ்கள் எதுவுமே கர்நாடகாவிற்குள் செல்லவில்லை. பெங்களூர் செல்ல வேண்டிய பஸ்கள் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் அரசு பஸ்களை பயன்படுத்தி பெங்களூருக்கு வர முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர்.

இரு மாநில எல்லையில் 2 கி.மீ தூரம் பரிதாபமாக நடந்து கர்நாடக எல்லைக்குள் சென்று உள்ளூர் பஸ்கள் மூலம் பெங்களூர் நகருக்குள் சென்றனர். இந்நிலையில், 12ம் தேதி உச்சநீதிமன்றம் மற்றொரு உத்தரவை பிறப்பித்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீரை திறக்கச் சொல்லியது. இதையடுத்து பெங்களூரில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. தமிழக பதிவெண் லாரிகள் தேடி தேடி தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து தமிழக பதிவெண் கார்கள், ஒசூர் எல்லையை தாண்டி கர்நாடகாவிற்குள் நுழைய இரு மாநில போலீசாரும் அனுமதி மறுத்துவிட்டனர். தமிழக பதிவெண் கொண்ட தனியார் பஸ்களும் கூட இயக்கப்படவில்லை. இரு மாநிலங்களிலும் பிற மாநில வாகனங்கள் மீது கல்வீசப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின.

இதையடுத்து பெங்களூரின் பக்கத்து ஊரான ஒசூரில் வசிப்போர் கூட பெங்களூர் வர எல்லையில் 2 கி.மீ நடந்து கர்நாடகாவிற்குள் வர வேண்டியதாயிற்று. தமிழக பதிவெண் வண்டிகள் கர்நாடகாவிற்குள் வந்தால் தாக்கப்படும் என்ற அச்சம் தொடர்ந்து முன்னிருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது.

உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து கர்நாடகாவை குட்ட, குட்ட இந்த பதற்றம் அதிகரித்தபடியே இருந்தது., லாரி உரிமையாளர்களும் சரக்குகளை கையாள முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை தள்ளிப்போட்டதோடு, தமிழகத்திற்கு மிக குறைந்த அளவே தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனால் கன்னட மக்கள் மகிழ்ச்சியிலுள்ளனர்.

இதையடுத்து 1 மாதத்திற்கு பிறகு இரு மாநிலங்கள் நடுவே இன்று காலை முதல் போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. தமிழக பதிவெண் கார்களும், கர்நாடக பதிவெண் கார்களும் பரஸ்பரம் பிற மாநிலங்களுக்குள் நுழைய போலீசார் அனுமதித்தனர். லாரிகளும் இயங்குகின்றன. அதேநேரம், தமிழக அரசு பஸ்கள் இன்னும் இயங்கவில்லை. மாலைக்குள் அவையும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்ராஜ்நகர் மாவட்ட எல்லையிலும் போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...