கோவை: கோவையில், யானை தாக்கி வனத்துறையின் ஆர்.ஆர்.டி (Rapid Response Team) பிரிவைச் சேர்ந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில், யானை தாக்கி வனத்துறையின் ஆர்.ஆர்.டி (Rapid Response Team) பிரிவைச் சேர்ந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை வனத்துறையின், ஆர்.ஆர்.டி பிரிவில் பணியாற்றி வந்தவர் வெங்கடேஷ் (28). வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்திடும் நேரத்தில் அவற்றை விரட்ட வனத்துறைக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்வார்.

அவ்வாறு நள்ளிரவு 1.30 மணியளவில் தடாகத்தை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் அருகே யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதில், ஒரு காட்டு யானையை வெங்கடேஷ் விரட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், அந்த யானை வெங்கடேஷை துரத்த ஆரம்பித்துள்ளது. பதற்றத்தில் தடுக்கிவிழுந்த வெங்கடேஷை யானை தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
வனத்துறையில், ஆர்.ஆர்.டி பிரிவினருக்கு டார்ச் லைட், பட்டாசு போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காததே இந்த உயிர் பலிக்கு காரணம் என்று பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.

அவரது மறைவை அறிந்த திருப்பூர், நீலகிரி, சத்தியமங்கலம் மற்றும் பொள்ளாச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
தகவல் அறிந்த முதன்மை வன பாதுகாவலர் ஸ்ரீவத்சவ் மற்றும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் ஆகியோரும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க உறுப்பினர்களும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்று வேட்டைத்தடுப்பு காவலர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், முறையான உபகரணங்கள் மற்றும் பயண படிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு பணியின் போது மரணமடைந்தால் ரூ.10 லட்சத்திற்கான இழப்பீடு உள்ளதாகவும், ஆனால், இந்த ஆர்.ஆர்.டி பிரிவினருக்கு அந்த வசதிகள் இல்லை என்றும் தெரிகிறது.
இதுகுறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் கூறுகையில், "இந்த பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து எங்களையும், எங்களது பயிர்களையும் பாதுகாக்கின்றனர். ஆனால், பெட்ரோல் நிரப்பக் கூட அவர்களுக்கு பணம் வழங்கப்படுவது இல்லை. இரவு நேரத்தில் எங்கே சென்றாலும் நடந்தே செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்." என்றார்.
உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு அதிகாரிகள் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஓசை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சையது.