கோவை: உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக ஒரு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
கோவை : உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக ஒரு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில நெடுஞ்சாலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உக்கடம்-ஆத்துப்பாலம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தொடங்கியது.
1.95 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே கரும்புக்கடை பகுதியில் இருந்து தொடங்கி உக்கடம்-செல்வபுரம் புறவழிச் சாலையில் திரும்பும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலத்தில் 55 தூண்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக 131 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை ஒரு ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் கூறுகையில், "நிலம் எடுப்பது தொடர்பாக 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும், முதற்கட்டமாக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரையிலும் பணி தொடங்கப்பட உள்ளது." என்றார்.
ஒரு சதுர அடிக்கு ரூபாய் 1,500 (Guide line value) என்ற நில மதிப்பீடு அளவீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு அதிலிருந்து இரண்டே கால் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இழப்பீடு வழங்க ரூ 50 கோடி மாநில நெடுஞ்சாலை துறையினர் ஏற்கனவே மாவட்ட வருவாய் துறையிடம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.