சென்னை: 18 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சட்ட விரோதம் அல்ல என்றும், அந்த தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை: 18 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சட்ட விரோதம் அல்ல என்றும், அந்த தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.
அரசுத் தரப்பு வாதம், டி.டி.வி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை ஆகஸ்டு 31-ம் தேதி நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கினார். அப்போது, 18 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சட்ட விரோதம் அல்ல என்றும், அந்த தகுதி நீக்கம் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.