நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இருக்கும் ரயில்பாதையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் மலைரயில் சேவை பாதிக்கப்பட்டது.
நீலகிரி : குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் இருக்கும் ரயில்பாதையில் ராட்சத மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் மலைரயில் சேவை பாதிக்கப்பட்டது.

குன்னூர் - உதகை ரயில் பாதையின் ஓரத்தில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான நிலத்தில் ராட்சத மரங்கள் உள்ளன. மழை காலங்களில் இந்த மரங்கள் தண்டவாளத்தில் விழுந்து விடுகின்றன. இதனால், ரயில் போக்குவரத்து பாதிப்படைகிறது. குன்னூர் பகுதியில் கடந்த ஒருவார காலமாக மழை இல்லாமல், பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் பனி பெய்வதும் போன்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், குன்னூர் - உதகை ரயில் பாதையில் வெலிங்டன் ரயில்நிலையம் அருகே ரயில் பாதை ஓரத்தில் ராட்சத மரங்களில் ஒன்று இன்று மாலை திடீரென்று ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. இதனால், சுமார் 8 அடி நீளம் கொண்ட ரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால், குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரயில் வெலிங்டன் ரயில்நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

அதேபோன்று, உதகையிலிருந்து குன்னூர் நோக்கிவந்த பயணிகள் ரயில் அருவங்காடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த ரயில்வே பொதுப்பணித் துறை ஊழியர்கள் விரைந்து சென்று ராட்சத மரத்தை மின் வாள் கொண்டு வெட்டி அகற்றினர். அதன் பின்னர், சேதம் அடைந்த தண்டவாளத்தை மாற்றி புதிய தண்டவாளத்தை பொருத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு மலைரயில் போக்குவரத்து சீரானது.