நீலகிரி : கூடலூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது உள்ளூர் மக்களும் கடும் அவதிப்படுகின்றனர்.
நீலகிரி : கூடலூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது உள்ளூர் மக்களும் கடும் அவதிப்படுகின்றனர்.

கூடலூர் நகர் வழியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் முதுமலை, மசினகுடி, தவளைமலை, ஊசிமலை போன்ற சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் உதகை மற்றும் குன்னுரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் நகரமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது. அதுமட்டுமில்லாமல், சாலைகளில் கால்நடைகள் உலா வருவதால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது :- திரையரங்கு சாலை, பேருந்து நிலைய சாலை, கேலிகட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் நிகழ்கின்றன, என்றனர்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.