கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து, இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், அதன் அருகில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இன்று அகற்றப்பட்டன.
கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து, இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், அதன் அருகில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இன்று அகற்றப்பட்டன.

காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சித்தாபுதூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 216 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் சிதிலமடைந்து, எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. இதன் அருகில் 300-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளும் உள்ளன.

அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழும் பட்சத்தில் குடிசைகள் அமைந்துள்ள பகுதியிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பழுதடைந்த அடுக்குமாடி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டிடங்கள் உருவாக்கிட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கும் வரை செங்காடு பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 216 வீடுகளிலும் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுக்குமாடி கட்டிடங்களை ஒட்டி ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை இடிக்கும் பணிகளை குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். குடிசைகளில் வசித்து வந்த 279 நபர்களுக்கு கீரணத்தம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.