கோவை : ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து கடந்த 5 நாட்களாக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதிக்காமல் கால தாமதப்படுத்தி வருவது மனிதநேயம் உள்ளவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து கடந்த 5 நாட்களாக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்லும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதிக்காமல் கால தாமதப்படுத்தி வருவது மனிதநேயம் உள்ளவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் உதய நாயகமின் (64) என்பவரின் மனைவி சிசிலியா மேரி (53). இவர்கள் கடந்த 1990-ம் ஆண்டு முதல் பவானிசாகர் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். உதய நாயகமின் உட்பட இவரது மகன்கள் ஐந்து பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிசிலியா மேரி கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதற்கு ஈரோட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

போதிய பண வசதி இல்லாத காரணத்தினால் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சிசிலியா மேரியை அவரது குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஆனால், தீவிர சிகிச்சை பெற வந்த இந்த மூதாட்டிக்கு போதிய சிகிச்சைகளை கொடுக்காமல் மருத்துவர்கள் தினமும் அலைக்கழித்து வந்தனர். சிசிலியாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில், தினமும் சுமார் 70 கி.மீ., பயணம் செய்து, கடந்த 5 நாட்களாக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார். ஆனால், மருத்துவர்கள் தினமும் மருத்துவப் பரிசோதனைகள் மட்டும் செய்து அனுப்பி விடுகின்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலையிலுள்ள நோயாளியை, மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுக்க மருத்துவர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி தவிர்கின்றனர். அதேபோல, மருத்துவர் ஒருவர் பரிசோதனையின்போது கையெழுத்துப் போடாததால், இன்று, நாளை என மருத்துவமனையில் அனுமதிக்க காலதாமதம் ஏற்படுவதாகவும் இலங்கை முகாமை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 10-ம் தேதி சிகிச்சைக்கு வந்த இந்த மூதாட்டி நேற்று வரை பல்வேறு அலட்சியங்களால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து நோயாளியின் மகன் சஞ்சய் கூறியதாவது :- நாங்கள் கடந்த 10-ம் தேதியில் இருந்து என் அம்மாவிற்கு சிகிச்சை கொடுக்க வேண்டி தினமும் 70, 80 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருகிறோம். இப்படி மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள என் அம்மாவை தினமும் அதிக தூரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருவது, அவரது உடல்நிலையை இன்னும் பலவீனப்படுத்தி உள்ளது. அவர் இன்னும் உணவு உண்ண முடியாத அளவிற்கு புற்றுநோய் கட்டி உடைந்து பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான அவசர சிகிச்சை கொடுக்காமல் தினமும் கையெழுத்து இல்லை, மருத்துவர் புதன்கிழமை தான் வருவார் என பல்வேறு காரணங்களை சொல்லி அலைக்கழிப்பது வேதனை அளிக்கிறது, என்றார்.
ஆபத்தான சூழலில் வழியின்றி வரும் ஏழை நோயாளிகளுக்கு வாழ்க்கைக்கான வழியினை தேடிக் கொடுக்க வேண்டிய மருத்துவர்கள், பல்வேறு காரணங்களைச் சொல்லி நோயாளிக்கு அதிக வலியை ஏற்படுத்துவது காண்போரை அதிர்ச்சி அடையச் செய்கிறது.
