திருப்பூர் : நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், திருப்பூர் தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கு தனியார் நிறுவனம் கடன் வழங்கி வருகிறது.
திருப்பூர் : நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், திருப்பூர் தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கு தனியார் நிறுவனம் கடன் வழங்கி வருகிறது.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்பட்டு வருவதை தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், தற்போது உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனத்திற்கான எரிபொருட்கள் வாங்கவும் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், திருப்பூரில் ஸ்ரீராம் எனும் நிறுவனம் ‘ஸ்மைலேஜ்’ எனும் திட்டம் மூலமாக எரிபொருட்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதன்படி, ரூ. 100-க்கு எரிபொருட்கள் நிரப்புபவருக்கு மாதத்திற்கு ரூ.1.50 வட்டியாக வசூலிக்கப்படுகிறது.

எரிபொருள் நிரப்பியதற்க்கான தொகையை விரைந்து செலுத்தும் போது நாட்கணக்கிலான வட்டி மட்டுமே பெறப்படும் என்றும், லிட்டருக்கு 85 காசுக்கான பெட்ரோல் வழங்கப்படும் என்றும், இதன்வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு லாபம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், முதல் மொபைல் மூலமாக பெறப்படும் (OTP) ஒரு முறை கடவுச் சொல் மூலம் பெறுவதால் எளிதில் எரிபொருள் நிரப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வை அனைவரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை சாதகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், வாகனங்கள் அதிகமாக வைத்திருக்கும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், எப்போதும் கையில் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், வழிப்பறிப் போன்ற சம்பவங்களில் இருந்து தப்பித்து, பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள உபயோகரமாக அமைவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.