கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை குடியிருப்புவாசிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை குடியிருப்புவாசிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள் மற்றும் அரசுநிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை இடிக்கக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்துடன் இணைந்து கோயம்புத்தூர் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கு மண்டலம் மேதவர் காலனி அடுக்குமாடி குடியிருப்பின் மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 35 ஆக்கிரமிப்பு வீடுகள் கடந்த 10-ம் தேதி அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், குமாரசாமி ஏரி (முத்தண்ணன் குளம்) தெற்கு பகுதியில் 69 வீடுகள் அப்புறப்படுத்தத் தெரிவிக்கப்பட்டது. 20 எண்ணிக்கையில் வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆக்கிரமிப்பு நபர்களுக்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று சீரநாயக்கன்பாளையம் எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் 117 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற உத்தேசிக்கப்பட்டது. அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 35 ஆக்கிரமிப்பு வீடுகள் ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வி.கே.கே. மேனன் ரோடு பகுதியில் 279 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடுதாரர்கள், தற்போது வசித்து வரும் உறுதியற்ற அபாயகரமான கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி முன்னதாக அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதே இடத்தில் புதிய கட்டுமானம் நிறைவு பெற்ற பின்னர் குடியேற ஒதுக்கீடு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. வி.கே.கே. மேனன் ரோடு பகுதி ஆக்கிரமிப்;புதாரர்களுக்கு வீடு ஒதுக்கீடு கீரணத்தம் பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக குடியேற செங்காடு பகுதியில் மாநகராட்சி நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பீளமேடு அண்ணாநகர், ரங்கவிலாஸ்மில் தென்புறம் 20 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும்படி நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புதாரர்கள் 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளதால் 15-ம் தேதி அப்புறப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 24 இடங்களில் 3,514 ஆக்கிரமிப்புகள் வரும் 31-ம் தேதி வரை கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் மூலம் நீர்நிலை மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இதில், ஜீவா நகர், தாகூர் ரோடு மணியகாரம்பாளையம், உக்கடம் ஸ்லைட்டர் ஹவுஸ், கிழக்கு தோட்டசாலை, சித்தாப்புதூர், காமராஜபுரம், ராயப்பன் லே-அவுட், மஜீத்காலனி, ஜி.எம்.நகர், பெரியார் நகர், குறிச்சி, பி.என்.புதூர் எம்.ஜி.ஆர்.காலனி, அண்ணாநகர் பீளமேடு, முத்தண்ணன் குளம், காயிதே மில்லத் வீதி, பாலுசாமி வீதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேற்கண்ட இடங்களில் மாற்று வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளில் குடியேறும்படியும், உடனடியாக தற்போதுள்ள ஆக்கிரமிப்பு நீர்நிலை அரசுநில பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட நீர்நிலை மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாமல் ஆக்கிரமிப்பு பகுதியிலேயே உறுதியற்ற குடிசை கட்டுமானங்களில் தொடர்ச்சியாக இருந்தால் பெருமழை அல்லது இயற்கை சீற்றம் ஏற்பட்டு பாதிப்புகள் உருவானால் ஆக்கிரமிப்புதாரர்களே பொறுப்பு ஆவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வி.கே.கே. மேனன் ரோடு பகுதியில் இந்த விபரத்தினை தெளிவாக தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துடன் இணைந்து மாநகராட்சியின் பணியாளர்கள் செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன் முன்னிலையில் பணிகளை துரிதமாகச் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.