கோவை : கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருநாய்கள் கருத்தடை சிகிச்சை மையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தெரியவந்துள்ளது.
கோவை : கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருநாய்கள் கருத்தடை சிகிச்சை மையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தெரியவந்துள்ளது.
நகரில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து பராமரிப்பு செய்யும் பணிகளை ஹ்யூமன் அனிமல் சொசைட்டி (Humane Animal Society) மற்றும் பீபுல் ஃபார் அனிமல் ( People for Animal) யூனிட் II ஆகிய தன்னார்வ அமைப்புகளோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மொத்தமுள்ள 100 வார்டுகளில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 20 வார்டுகளை ஹ்யூமன் அனிமல் சொசைட்டியிடமும், மீதமுள்ள 80 வார்டுகளை பிபுல் ஃபார் அனிமல் யூனிட் II அமைப்பினரிடமும் வழங்கியது. இந்த அமைப்புகள் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு நோயுற்ற தெருநாய்களுக்கு சிகிச்சையளித்து பராமரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், உக்கடம் பகுதியில் இயங்கி வரும் தெருநாய் கருத்தடை சிகிச்சை மையத்தை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த அப்பகுதி மக்களின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பினை தொடர்ந்து சில மாதங்களாக இந்த மையம் செயல்படாமல் இருந்தது. மேலும், தெருநாய் கருத்தடை சிகிச்சைக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்தக்கோரி ஒப்பந்தம் செய்யப்பட்ட அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதனால், தெருநாய் கருத்தடை சிகிச்சை பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்தது. நகரில் தெருநாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உக்கடம் பகுதியில் இயங்கிவரும் தெருநாய் கருத்தடை சிகிச்சை மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது உறுதியாகியுள்ளது. நகருக்கு வெளியே, குறைந்த அளவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இந்த மையம் அமைக்கப்படவிருப்பதாக தெரியவந்துள்ளது.