கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சேலம் சங்ககிரியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சேலம் சங்ககிரியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் சங்ககிரியை சேர்ந்த பழனியப்பனின் மகன் செல்வம் என்ற செல்வராஜ் (31). இவர் பீளமேடு பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செல்வராஜை அவரது மனைவி வாரந்தோறும் வந்து மனுப்போட்டு சந்திப்பது வழக்கம். ஆனால், மனைவிக்கும் செல்வராஜ்-க்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் இருந்த மனைவி செல்வராஜை சுமார் மூன்று மாதங்களாக வந்து பார்க்கவில்லை.
இதனால் மனம் உடைந்து போன கைதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு அறுக்கும் கம்பிகளை வைத்து இடது மணிக்கட்டில் அறுத்துள்ளார். கொசு விரட்டி மருந்தையும் குடித்துள்ளார். பின்னர் இதையறிந்த சக கைதிகள் சிறைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் வந்த சிறைத்துறை அதிகாரிகள் கைதியை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி செல்வராஜ் இன்று அதிகாலை யாரும் எதிர்பாராத நேரத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதும் தனியார் காவலர்கள் அவரை தீவிரமாக தேடினர். அதேபோல சிறைத்துறை காவலர்களும் கோவை மாநகர போலீசாரும் தப்பித்து ஓடிய சிறைக் கைதியை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைவாசி திடீர் என மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே செல்வராஜின் பாதுகாப்புக்கு இருந்த மாநகர ஆயுதப்படை காவலர் சரவணகுமாரை இடைநீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.