நீலகிரி : மஞ்சூர் - முள்ளி மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை காட்டு யானைகள் மீண்டும் வழிமறித்த சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர்.
நீலகிரி : மஞ்சூர் - முள்ளி மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை காட்டு யானைகள் மீண்டும் வழிமறித்த சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் - முள்ளி சாலையின் ஓரத்தில் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சாலை வழியாக கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த பல வாரங்களாகப் பெய்து வந்த மழை காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது.
உணவை தேடி கடந்த சில வாரங்களாக இப்பகுதிகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால், வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மஞ்சூரில் இருந்து புறப்பட்டு முள்ளி வழியாக கோவையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியான வனப்பகுதியில் திரண்டிருந்த யானைக் கூட்டங்கள் பேருந்தை வழிமறித்து நின்றன. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். மேலும், பயணிகள் சிலர் தங்களது செல்போன் மூலமாக ஆர்வத்துடன் யானை கூட்டங்களை புகைப்படம் எடுத்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, அவை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், பயணிகள் நிம்மதியடைந்தனர்.
கடந்த மாதம் இறுதி வாரத்தில் இதே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை யானைகள் வழிமறித்த நிலையில், இன்று மீண்டும் யானைகள் பேருந்தை முற்றுகையிட்டுள்ளது.