கோவை : தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ள நிலையில், கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ள நிலையில், கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக வருகிற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் (நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி) மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில், மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாததால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, கோவை, நீலகிரி, விருதுநகர் நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களுக்குப் பிறப்பிக்கப்பட்ட ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரெட் அலார்ட் வாபஸ் பெறப்பட்டாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, நெல்லை, தேனி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை மறுநாள் வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.