கோவை : தமிழகத்தைத் தாக்கும் எந்த மாதிரியான மழையினையும் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாட்டு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோவை : தமிழகத்தைத் தாக்கும் எந்த மாதிரியான மழையினையும் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாட்டு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோவை அ.தி.மு.க., அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- மழை வருவதற்கு முன்னரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளார். மேலும், சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், குளங்கள் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கினால் அகற்ற மோட்டார்கள் தேவையான அளவு இருக்கின்றன. தேவைப்படும் இடங்களில் மோட்டார்கள் வாடகைக்கு எடுக்கப்படும். மரம் அறுக்கும் இயந்திரம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை எப்படி வந்தாலும் சமாளிக்கும் நிலை இருக்கின்றது. பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு தங்கும் இடங்கள், உணவு போன்றவை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரன் அவ்வப்போது நிறைய கமெடி செய்வார். அவரைக் கட்சியில் இருந்து விலக சொன்னதே நானும், தங்கமணியும்தான். திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதியாகிவிட்டது என்பதால் தினகரன் இப்படி பேசுகின்றார். ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., இருவரும் அண்ணன் தம்பி போல் இருக்கின்றனர். 10 வருடங்கள் கட்சியில் டி.டி.வி. தினகரன் இல்லை. அவரை ஜெயலலிதா விலக்கி வைத்திருந்தார். டி.டி.வி. தினகரன் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. டி.டி.வி. தினகரனுக்கு ஓ.பி.எஸ்., முழுமையாக பதில் அளித்துள்ளார். தினகரன் பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை, என்றார்.
மேலும், தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் பணம் கைமாறியிருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் கூறிய குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க மறுத்த அவர், சம்மந்தப்பட்ட துறையில் கேட்கவேண்டிய கேள்வி என தெரிவித்தார். மேலும், டி.டி.வி. தினகரன் - ஒ.பி.எஸ். சந்திப்பினை எம்.எல்.ஏ. கனகராஜ் வரவேற்று இருப்பது குறித்த கேள்விக்கும் பதில் அளிக்க அமைச்சர் வேலுமணி மறுத்துவிட்டார்.